குடிநீர் இணைப்பு முறைகேடு: 4 என்ஜீனியர்கள் சஸ்பெண்ட் - ஊழியர்கள் போராட்டம்
நெல்லை: நெல்லை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்ததாக 4 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி மேயர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாநகராட்சி அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி 17வது வார்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
நேற்று நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் இது பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குற்றம் சாட்டிய அதிமுக கவுன்சிலர் சுதா பரமசிவன் மீது திமுக கவுன்சிலர் வடையை தூக்கி வீசியதால் பெரும் ரகளையானது.
இந்த நிலையில் மாநகராட்சி பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், பைஜூ, எஸ் கருப்பசாமி, பிரதீப் ஆகிய 4 பேரையும் மாநகராட்சி ஆணையர் தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மேயர் எ.ஏல் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அலுவலர்கள் எதிர்ப்பு..
இந்த நடவடிக்கைக்கு மாநகராட்சி அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், திமுக கவுன்சிலர் ரேவதி, முன்னாள் திமுக கவுன்சிலர் உமா மகேஸ்வரி, செயற்பொறியாளர் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.