சட்டசபை இடைத் தேர்தலுக்கு வெளி மாநில பார்வையாளர்கள் - நரேஷ் குப்தா
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் வெளி மாநில பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும், தலா ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பர்கூர் தொகுதியில், ஆனந்த் கிஷோர் (பீகார்), தொண்டாமுத்தூர் தொகுதியில், கோப்பலா துர்கானந்த் பிரசாத் ராவ் (சட்டீஸ்கர்), கம்பம் தொகுதியில் ராஜீவ் குப்தா (குஜராத்), இளையாங்குடி தொகுதியில், பிரதீப் குமார் ஜாஜோரியா (ஜார்கண்ட்), ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், எஸ்.ஆர்.உமாசங்கர் (கர்நாடகா) ஆகியோர் பார்வையாளர்களாக செயல்படுவர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒருபோதும் முறைகேடு செய்ய முடியாது. இயந்திரங்கள் தயாரிக்கப்படும்போது, இந்த மாநிலத்துக்குதான் செல்கிறது, இவர்தான் வேட்பாளர் என்று யாருக்கும் தெரியாது. எனவே, இயந்திரங்களை தயாரிக்கும் போதே அதில் திட்டமிட முடியாது.
வாக்குப் பதிவுகள் வெப் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும். வாக்குப் பதிவு நிலவரம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கும்.தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகிறது.
இடமாற்றம் செய் யப்பட்டுள்ள ஐஜி சிவனாண்டி, 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும், ஐஜி கிருஷ்ணமூர்த்தி திருமங்கலம் இடைத்தேர்தலின் போதும் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டவர்கள். இதுபோன்ற இடமாற்றம் இயல்பானதுதான் என்றார் குப்தா.
ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பார்வையாளர்களில், ஸ்ரீவைகுண்டம் தவிர மற்ற தொகுதிகளுக்கான பார்வையாளர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.