திமுக பாவமன்னிப்பு கேட்டால் மீண்டும் கூட்டணி-தா.பா
ஸ்ரீவைகுண்டம்: அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை இந்திய கம்யூ கட்சி முழு பலத்துடன் எதிர்க்கும் என்று தா. பாண்டியன் கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தனலெட்சுமியோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்த இ.கம்யூ கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இந்திய கம்யூ கட்சி தனது பிரசாரத்தை தொடங்கி விட்டது. எங்கள் கட்சி தொடக்கம் முதலே பிரச்சாரம் தொடங்கி விட்டது. உழைக்கும் மக்களுக்காக இ.கம்யூ கட்சி தொடர்ந்து போராடும். இன்றைய பிரச்சனைகளை மக்களிடம் கூறி எங்களுக்கு வாக்கு கேட்போம்.
எங்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கினால் சட்டமன்றத்தில் இப்பகுதி மக்கள் பிரச்சனை குறித்து குரல் எழுப்புவோம். திமுக, காங் கட்சிக்கு எதிராக அளிக்ககப்படும் வாக்குகளையும், அதிமுக வாக்குகளையும் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
பண பலம், அத்துமீறல், அதிகார பலம் போன்றவைகளை இத்தொகுதியில் முழுபலத்துடன் எதிர்ப்போம் என்றார்.
பின்னர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக செய்த தவறுகளை திருத்திக் கொண்டு, பாவமன்னிப்பு கேட்டால், அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேருவது குறித்து பரிசீலிக்கப்படும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாங்கள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டோம்.
அதிமுக போட்டியிடாததால் திமுக-காங்கிரஸ் கட்சிகளை வெறுக்கும் மக்களின் ஓட்டுக்கள் எங்களுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திமுக கூட்டணிக்கு நாங்கள் மீண்டும் செல்வோம் என்பது கற்பனை. திமுக இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அதற்காக பாவமன்னிப்பு கேட்டால், மீண்டும் அக் கட்சியுடன் சேருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.