பிரபாகரன் மறைவை ஏற்க வைகோ-நெடுமாறன் தயாரில்லை: கே.பி
டெக்கான் குரோனிக்கிள் நாளிதழுக்கு கே.பி. பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழர்கள் தாயகம் பெற இந்தியா நிச்சயம் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை.
அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்.
பிரபாகரன் உடலைப் பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை..
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் நான் முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை.
தற்போது நாங்கள் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்து வரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது.
ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது.
உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள். இந்தியா எங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் கே.பி.