மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட காம்ப்ளி திட்டம்
சமீபத்தில் தனது பள்ளித் தோழரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான சச்சின் குறித்து சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் காம்ப்ளி.
இந்த நிலையில் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி..
கேள்வி - நீங்கள் லோக் பாரதி என்ற கட்சியின் துணைத் தலைவராக உள்ளீர்கள். வருகிற மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
காம்ப்ளி - மக்களுக்கு மாற்றம் தேவை. நாட்டுக்கு மட்டுமல்லாது மகாராஷ்டிராவுக்கும் ஒரு மாறுதல் தேவைப்படுகிறது.
கேள்வி - கஞ்சூர்மார்க் தொகுதியிலிருந்து போட்டியிடுவீர்களா?
காம்ப்ளி - அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது. நிச்சயம் அவர்களுக்காக நான் போராடுவேன். இந்தத் தொகுதிதான் என்று இல்லை. எந்தத் தொகுதி மக்களுக்காகவும் நான் போராடக் கூடியவன் என்றார் காம்ப்ளி.
சமீபத்தில்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் உ.பி. மாநில லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அந்த வரையில் மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு காம்ப்ளி எம்எல்ஏ ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.