சென்னை நீதிபதியை மிரட்டிய அமைச்சர் - நடவடிக்கை கோரி பிரதமரிடம் எம்.பிக்கள் மனு
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி அவரிடம் இன்று 150க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று பிரதமரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், 85 லோக்சபா எம்.பிக்களும், 95 ராஜ்யசபா எம்.பிக்களும் கையெழுத்திட்டிருந்தனர்.
அதில், இந்த விவகாரத்தை பிரதமர் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளிப்படையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் பாஜக, அதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த ராஜ்யசபா உருப்பினர் சந்தன் மித்ரா கூறுகையில், இதுகுறித்து விசாரித்து விட்டு பின்னர் விளக்கம் தருவதாக பிரதமர் தெரிவித்தார்.
அதேசமயம், மத்திய அமைச்சர்கள் யாரும் நீதிபதியுடன் பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே கூறி விட்ட நிலையில், மத்திய அரசு எப்படி இதில் தலையிட முடியும் என்றும் பிரதமர் எங்களிடம் கேட்டார் என்றார்.