கங்குலிக்குச் சொந்தமான ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக புகார்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தி சேனல் 10 என்ற வங்க மொழிச் சேனலில் இதுதொடர்பான ஸ்டிங் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அதில், கொல்கத்தாவில் உள்ள கங்குலிக்குச் சொந்தமான ஹோட்டலில், உயர் ரக விபச்சாரம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது செய்திக்கு ஆதாரமாக வீடியோ காட்சிகளையும் அது ஒளிபரப்பியுள்ளது. அதில், ஹோட்டல் டிஸ்கோ அரங்கில், டான்ஸ் ஆடும் பெண்கள், வாடிக்கையாளர்களுடன் இன்பமாக இருக்க பேரம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஹோட்டல் பார்க் தெருவில் உள்ளது. தனது சகோதரர்களுடன் இணைந்து இந்த ஹோட்டலை நிர்வகித்து வருகிறார் கங்குலி.
இந்த ஹோட்டல் ஊழியர்கள், வார இறுதி நாட்களில் இரவு நீண்ட நேரத்திற்கு நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். ஹோட்டலின் பாரில் இது நடைபெறும். அப்போது விபச்சார புரோக்கர்களால் டான்ஸர்கள் என்ற பெயரில் உள்ளே அனுப்பப்படும் பெண்கள், வாடிக்கையாளர்களை அணுகி ரேட் பேசுகின்றனராம்.
இந்தப் புகார் குறித்து கங்குலி தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் இல்லை.
போலீஸாரிடம் கங்குலி புகார்..
இதற்கிடையே, இந்த ஸ்டிங் நடவடிக்கை குறித்து காவல்துறையின் உதவியை நாடியுள்ளார் கங்குலி. மேலும், சட்டப்பூர்வ ஆலோசனையையும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்ட ஆலோசனையை நான் கோரியுள்ளேன். போலீஸ் கமிஷனர் கெளதம் சக்ரவர்த்தியையும் நான் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.
இந்த செய்தியால் நான் மனம் உடைந்து போய் விடவில்லை. இது சகஜம்தான். எனவே இதைக் கண்டு நான் சங்கடப்படவில்லை. இதை உரிய முறையில் சமாளிப்பேன் என்றார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி காட்டிய வீடியோ காட்சிகள் அடங்கிய சிடிக்களை போலீஸார் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து துணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறுகையில், சிடிக்களைப் பெற்று அதை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யப்படும்.
ஹோட்டல்களில் வெறும் பாடகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில்முறை டான்ஸர்களுக்கு அனுமதி கிடையாது என்றார் அவர்.
இருப்பினும் தேவையான உரிமங்களை தங்களது ஹோட்டல் வைத்துள்ளதாக கங்குலியின் அண்ணன் ஸ்னேஹசிஸ் கூறியுள்ளார்.