வாக்குப் பதிவு எந்திரம் மீதான புகார்- நிரூபிக்க பாமகவுக்கு ஆணையம் உத்தரவு
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுமாறு பாமகவுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டணிகள் மாறி மாறி அனைத்துத் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டபோதும் வென்று வந்த கட்சி பாமக. ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி்க்கு பெரிய முட்டை தான் கிடைத்தது.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு தோல்விக்கு மின்னணு எந்திரத்தைக் குறை கூற ஆரம்பித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தேர்தலில் எந்திரகங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து பாமக. அத்துடன் மின்னணு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மனுவும் அனுப்பினார்.
மேலும் ஒரு மாடல் எந்திரத்தையும் உருவாக்கி அதில் முறைகேடு செய்வது எப்படி என்று 'டெமோவும்' கொடுத்தார் ராமதாஸ். இந்த டெமோவை தேர்தல் ஆணையத்துக்கும் நடத்திக் காட்டத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
இந் நிலையில் ராமதாஸை அவரது வழியிலேயே மடக்க திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் எப்படி மோசடி செய்வது என்பதை நிரூபித்துக் காட்டுமாறும், அதற்காக நேரத்தையும், தேதியையும் சில நாட்களில் தெரிவிக்குமாறும் பாமகவுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய செயலாளர் அஜய்குமார் பாமகவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்,
தேர்தல்களில் ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேட்பாளருக்கு அத்தனை வாக்குகளையும் விழும்படி செய்து விட முடியாது.
ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் தாங்கள் (பாமக) தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் மிகக் கடுமையானவை. எனவே, தேர்தல் ஆணையம் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்.
தேர்தல் ஆணையத்தின் இடத்தில், உங்களுக்கு (பாமக) வசதிப்பட்ட நாளில், நேரத்தில் இந்த செயல் விளக்கத்தை வைத்துக் கொள்ளலாம். எந்தத் தேதி என்பதை சில நாட்களில் தெரிவிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒரு வாரத்தில் செயல் விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் நேரில் செய்து காட்டப் போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.