ஸ்டாலின் பட்ட பாட்டுக்கு டாக்டர் பட்டம் - ஜெகத்ரட்சகன் பாராட்டு மழை
சென்னை: அண்ணா பல்கலை உன்னை அண்ணாந்து பார்த்து நிற்கிறது! உன் அறிவுக்கு மகுடம் சூட்டக் காத்திருக்கிறது! உனக்கு முனைவர் எனும் முடிசூட்டுகிறது. இந்தப் பட்டம் இந்த நாட்டிற்கு நீ பட்டபாட்டிற்குத் தந்த பட்டம் என்று கெளரவ டாக்டர் பட்டம் பெறும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியுள்ளார் மத்திய இணை அமைசசர் ஜெகத்ரட்சகன்.
இதுதொடர்பாக ஜெகத்ரட்சகன் எழுதியுள்ள வாழ்த்துக் கவிதை...
எங்கள் உதயசூரியனே! இதய சூரியனே! இளைய சூரியனே! இனிய சூரியனே! தளபதி' ஸ்டாலின்! இது பெயரல்ல; ஒரு மாபெரும் வரலாற்றின் முத்திரை
கரும்புச் சித்தாந்தமான கம்யூனிசம் விளைந்த ருஷ்யாவின் மாமனிதன்; இரும்பு மனிதன் ஸ்டாலின்!
ஆனால் நீயோ எங்களுக்கெல்லாம் கரும்பு மனிதன்! இளைஞர்கள் உள்ளமெல்லாம் இனிக்கும் கரும்பு மனிதன்! ஒரு புதிய சமுதாயத்தை அரும்ப வைக்கும் அரும்பு மனிதன்!
கருணை என்றால் தயாளகுணம்.
தயாள குணம் தான் கருணை!
இரண்டு தயாள குணத்திற்கு அல்லது இரண்டு கருணைக்குப் பிறந்த நீ! கருணைத் தயாளன்!
அதனால், நீ வம்சத்தால் சூரிய வம்சம்!
குண அம்சத்தால் அன்பு என்னும் சீதளக்குளிர் நிறைந்த சந்திர அம்சம்!
அதனால் தான் உன் தந்தைக்கு - என் தலைவனுக்கு ஆலயம் அறிவாலயம்!
என் இளைய தலைவனான உனக்கு ஆலயம் அன்பாலயம்!
நீ துணை முதல்வர் ஆனது எதிர்பாரா முத்தம் அன்று; நாங்கள் நெடுங்காலம் ஏங்கி எதிர்பார்த்துப் பெற்ற எதிர்பார்த்த முத்தம்!
இந்தத் துணை முதல்வர் பதவிக்காக நீ காத்திருக்கவில்லை; காலம் கால்கடுக்க நின்று உனக்காகக் காத்திருந்தது!
உண்மையில், எங்கள் தலைவன் - உன் தந்தையின் பாசத்தால் வந்த பதவி அல்ல, இது நீ செய்த தியாகத்தால் தானாக வந்த பதவி!
நீ பட்ட விழுப்புண் தந்த விருது!
மத்தியச் சிறையில் உன் உடல்மீது விழுந்த தியாக முத்திரைகள் கொடுத்த பரிசு!
இது இலவசம் அல்ல, இனாம் அல்ல சன்மானம் அல்ல, நன்கொடையாய் வந்ததல்ல, நீ மிசா என்னும் உலைக்களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட புதிய வார்ப்பு அல்ல, அல்ல! புரட்சி வார்ப்பு!
அதற்காக இந்தப் பதவி உன்னை ஏற்றுக் கொண்டு தன்னை கவுரவப்படுத்திக் கொண்டிருக்கிறது!
இது ரத்தச்சாட்சியாக நீ பெற்றுக் கொண்ட ராஜபாரம்!
இன்று அண்ணா பல்கலை உன்னை அண்ணாந்து பார்த்து நிற்கிறது!
உன் அறிவுக்கு மகுடம் சூட்டக் காத்திருக்கிறது!
உனக்கு முனைவர் எனும் முடிசூட்டுகிறது.
இந்தப் பட்டம் இந்த நாட்டிற்கு நீ பட்டபாட்டிற்குத் தந்த பட்டம்!
எதையும் செய்யும் போது முனைந்து செய் உறுதியாய் நின்றுசெய் என்பார்கள். அதனால் முனை என்பது முனைந்து செய்வது சாதிப்பது என்பதாகும்.
ஆம் நீ எதையும் முனைந்து நின்று சாதித்தலின் முனைவன் முனை மழுங்காத முனைவன்!
துறைதோறும் துறைதோறும் தமிழ்நாட்டைக் தூக்கிநிறுத்த முனைந்து நின்று கொண்டு செய்வாய்! சாதிப்பாய்!
சரித்திரம் படைப்பாய் என்பதன் அடையாளம் தான் இந்த முனைவர் பட்டம்!
காலம் கொடுத்த எங்கள் இளைய தலைவா! துணை முதல்வா!
நீதான் இந்த நாட்டின் எதிர்காலம்! எங்கள் வருங்கால வசந்தகாலம்!
நீ தொண்டு செய்யப் பிறந்தவன்! எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்தவன்!
ஆட்சி நடத்துவதற்கான அன்பு, அறிவு, ஆற்றல், கனிவு, தெளிவு, துணிவு அனைத்தும் உள்ளவன் நீ! வல்லவன் நீ! எல்லார்க்கும் நல்லவன் நீ! எங்கள் வாழ்வும் நீ! வளமும் நீ தான்! எங்கள் இளைய கலைஞரே! இளைய தலைவரே! நீ தமிழ்போல வாழ்க! தமிழாக வாழ்க! வாழ்க பல்லாண்டு! வாழ்க பல்லாண்டு என்று பாராட்டியுள்ளார் ஜெகத்ரட்சகன்.