சுதந்திர தின விழா - டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு
வருகிற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதைக் கொண்ட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள். அதேபோல பாதுகாப்புப் படையினரும், பாதுகாப்புப் பணிகளில் மும்முரமாகியுள்ளனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கம் போல இந்த ஆண்டும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லியில், பிரதமர் மன்மோகன் சிங் கொடியேற்றி உரை நிகழ்த்தும் விழாவில் நாச வேலைகளில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விழா நடக்கும் பகுதி முழு வதும் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களின் கட்டுப்பாட்டில் விடப்படும். மேலும் ஷார்ப் ஷூட்டர்ஸ் எனப்படும் குறிபார்த்து சுடுவதில் திறமையான ஆயிரக்கணக்கான வீரர்களை தேர்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
விழா நடக்கும் செங்கோட்டை மற்றும் அணி வகுப்பு நடைபெறும் பாதை முழுவதும் 40 ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. 10 கேமராக்கள் விழா நடக்கும் இடத்திலும், 30 கேமராக்கள் செங்கோட்டை வரையிலான பாதையிலும் பொருத்தப்படும்.
பிரதமர் வீடு மற்றும் முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றிலும் தாக்குதல் நடத்த இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவின்போது, செங்கோட்டை, நாடாளுமன்றம், பிரதமர் இல்லம் போன்ற முக்கியப் பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லின் பல இடங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
விழா நடக்கும் போது செங்கோட்டை மற்றும் முக்கிய பகுதிகள் முழுவதையும் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க உள்ளனர்.
டெல்லியில் இப்போதே பாதுகாப்பு நடவடிக்கைள், அதிரடி சோதனைகள், கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
இண்டர்நெட் மையங்கள், தொலைபேசி பூத்துகள், மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.