பீகார் ஆற்றில் உடைப்பு - பெரும் வெள்ளம் - லட்சம் மக்கள் தவிப்பு
ஏராளமான வீடுகளை வெள்ள நீர் அடித்துச் சென்று விட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திறந்தவெளியில் பரிதவித்து வருகின்றனர். குடிநீர், உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த இடத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நாராயண் சிங் என்பவர் கூறுகையில், நாங்கள் பசியுடன் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் உணவு, பால் இல்லாமல் அழுது கொண்டிருக்கின்றன. ஆனால் அரசே, வெள்ளண் வந்து 24 மணி நேரமாகியும் கூட இதுவரை எங்களை மீட்கவோ, உணவு, பால் உள்ளிட்டவற்றைத் தரவோ நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றார்.
இதுவரை ஆற்று வெள்ளத்திற்கு 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியுள்ளன. மேலும் பல கிராமங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து வருகிறது.
நீரில் மூழ்கி இதுவரை 12 பேர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும்தான் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட கரைப் பகுதியை முதல்வர் நிதீஷ் குமார் இன்று பார்வையிடவுள்ளார்.
பாக்மதி ஆற்றில் மொத்தம் 3 கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பீகாரில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள காசி, கந்தாக், புதி, பாக்மதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் இந்த ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களை உரிய முறையில் எச்சரிக்காமல் இருந்ததாலும், கரைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.