ஆய்வு மையம் - மதுரை தியாகராஜர் என்ஜீனியரிங் கல்லூரியுடன் யாஹூ ஒப்பந்தம்
கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஆய்வு மையம் ஒன்றை தமிழகத்தில் நிறுவ யாஹூ நிறுவனம் முடிவு செய்தது. யாஹூ நிறுவனம் இதுபோன்ற ஆய்வு மையத்தை இந்தியாவில் நிறுவுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த மையம் மதுரையில் அமையப் போவதாக கூறப்பட்டது. தற்போது மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இந்த மையம் நிறுவப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கல்லூரியின் தாளாளர் கருமுத்து கண்ணன் மற்றும் யாஹூ ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவு தலைவர் சிதம்பரம் கொல்லங்கோடு ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பின்னர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த ஆய்வு மையத்தை யாஹூ இந்தியா நிறுவனம் அமைத்துள்ளது.
தியாகராஜர் கல்லூரியில் உள்ள திறமையாளர்கள் எண்ணிக்கை, அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மையத்தை இங்கு அமைக்க முடிவு செய்தோம்.
ஆய்வுப் பணிகளுக்காக சிறப்புக் குழுக்கள் அமைக்ப்படும். ஒரு வேளை இந்த ஆய்வில் ஈடுபடும் இக்கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்து விட்டுச் சென்றாலும் கூட ஆய்வுகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு.
ஆய்வு மையத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும், அதி நவீன ஹார்ட்வேர் சாதனங்களையும் யாஹூ வழங்கும்.
பாரல்லல் கம்யூட்டிங், டிஸ்டிரிபியூட்டிங் கம்ப்யூட்டிங் ஆகியவற்றின் காலம் போய் அடுத்து கிளவுட் கம்ப்யூட்டிங் காலம் வந்து விட்டது. இதுதான் எதிர்காலத்தில் கோலோச்சப் போகிறது. இது புதிய கான்செப்ட் ஆகும்.
கிளவுட் கம்ப்யூட்டிங் தொடர்பான கல்வி நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அடிப்படைக் கட்டமைப்புகளை இங்கு உருவாக்குவோம்.
இங்கு மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். 3 ஆண்டுகள் இந்த ஆராய்ச்சி நடைபெறும் என்றார் சிதம்பரம்.