பாக். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி - லண்டனிலேயே தங்க முஷாரப் முடிவு
லண்டன்: பாகிஸ்தானில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் தீ்ர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து தற்போதைக்கு பாகிஸ்தானுக்கு திரும்புவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்.
தற்போது முஷாரப், லண்டனில் தங்கியுள்ளார். இன்னும் சில காலத்துக்கு அவர் அங்கேயே தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. தேவைப்பட்டால் அவருக்கு அடைக்கலம் தரத் தயாராக இருப்பதாக சவூதி அரேபிய அரசும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய லண்டனில் ஒரு வீட்டை வாங்கி வைத்துள்ளார் முஷாரப். அந்த சொகுசு வீட்டில்தான் தற்போது முஷாரப் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பாகிஸ்தானி்ல ஆறு வார கால அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் சாசனச் சட்டத்தையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் முஷாரப். அதற்கு முன்பாக அதே ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியையும் டிஸ்மிஸ் செய்தார் முஷாரப்.
இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் பெரும் கொந்தளிப்புடன் போராட்டம் நடத்தினர்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முஷாரப்பால் நீக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட இப்திகார் செளத்ரி தலைமையிலான 14 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, முஷாரப்பின் செயல் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது என்பது நினைவிருக்கலாம்.
இதனால் தற்போது லண்டன் சென்றுள்ள முஷாரப், அங்கிருந்து நாடு திரும்பினால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சி அங்கேயே இருக்க முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே, முஷாரப் கோரினால் அவருக்குப் புகலிடம் தர தயாராக இருப்பதாக சவூதி அரசு கூறியுள்ளது.
பாகிஸ்தான் தலைவர்கள் லண்டனில் முடங்கியிருப்பது இது முதல் முறையல்ல. முன்பு பெனாசிர் பூட்டோ, பின்னர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் நீண்ட காலம் லண்டனிலேயே முடங்கிக் கிடந்த வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.