மதுரை: முதல்வருக்கு மிரட்டல்- 2 பேராசிரியர்கள் மீது வழக்கு
மதுரை: மதுரை அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனை சட்டையைப் பிடித்து இழுத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக 2 பேராசிரியர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரும் தலைமறைவாகி விட்டார்கள்.
இக் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக ஜெபராஜ் பணியாற்றி வருகிறார். இவர் மீது முதல்வர் ராஜேந்திரன் உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில்,
கடந்த 22-ந் தேதி மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் 3 நாள் நடைபெறும் பயிற்சிக்கு செல்ல பேராசிரியர் ஜெபராஜ் அனுமதி கேட்டு என்னிடம் கடிதம் கொடுத்திருந்தார்.
இது போன்ற பயிற்சிக்கு செல்ல வேண்டுமெனில் 3 தினங்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும். ஆனால் ஒரு தினத்திற்கு முன்பு கடிதம் கேட்டதால் அனுமதி தர முடியாத நிலை இருப்பதாக கூறினேன்.
ஆனால் பேராசிரியர் ஜெபராஜ் இதனை பொருட்படுத்தாமல் புனே சென்று விட்டார். பின்னர் 3 நாட்களுக்கு பிறகு திரும்பினார். அவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, உனக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்றார். அத்தோடு நில்லாமல், எனது சட்டையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளினார். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
பின்னர் மேஜையில் இருந்த கண்ணாடியை நொறுக்கினார். இதற்கு வணிகவியல் துறை பேராசிரியர் விஜய்ஆனந்தன், இளநிலை உதவியாளர் ஸ்டீபன்ராஜ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் 3 பேர் மீதும் புகார் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.