விமான சேவை பற்றாக்குறையால் மதுரை பயணிகள் பெரும் அவதி
ஒரு காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் தவிர வேறு விமானங்களே எட்டிப்பார்க்காத மாநகராக இருந்தது மதுரை. அடுத்து படிப்படியாக தனியார் விமானங்கள் எட்டிப் பார்க்கத் துவங்கின. இப்போது மதுரையில் தொழில்கள் பெருகிவிட்டன. சுற்றுலாவும் கணிசமாக வளர்ந்துள்ளது.
எனவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மதுரைக்கு அதிகரித்துள்ளது.
ஆனால் அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப விமான சேவை அதிகரிக்கப்படவில்லை. இதனால் டிக்கெட் கிடைக்காமல் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
விரைவில் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படவிருக்கும் மதுரை விமான நிலையத்தில் குறைந்த அளவு விமானங்கள் இயக்கப்படுவது பல வசதிக் குறைபாடுகளை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
மதுரை விமான நிலையத்துக்கு கடந்த ஜனவரி வரையில் தினமும் 11 தடவை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து விமானங்கள் வந்து போயின.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனியார் விமான நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியது. இதனால் மதுரைக்கு தற்போது 8 தடவைதான் விமானங்கள் வந்து போகின்றன.
தினமும் காலையில் சென்னையிலிருந்து 7.45 மணிக்கு வரும் தனியார் விமானம் 8.15 மணிக்கு புறப்படுகிறது. காலை 8.15 மணிக்கு வரும் இன்னொரு தனியார் விமானம் 8.45 மணிக்கு சென்னை செல்கிறது. மும்பையிலிருந்து சென்னை வழியாக வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பகல் 1 மணிக்கு மதுரை வந்து மீண்டும் பகல் 1.40 மணிக்கு மும்பை கிளம்பிச் செல்கிறது.
பகல் 1.45 மணிக்கு சென்னையிலிருந்து வரும் தனியார் விமானம் பிற்பகல் 2.15 மணிக்கும், மாலை 4.45 மணிக்கு சென்னையிலிருந்து வரும் விமானம் 5.15 மணிக்கும் சென்னைக்கு கிளம்பிச் செல்கின்றன.
இரவில் சென்னையிலிருந்து 7.45 மணிக்கு வந்த விமானம் இரவு 8.15 மணிக்கு செல்கிறது. இரவு 8.15 மணிக்கு மதுரை வரும் தனியார் விமானம் 8.45 மணிக்கு கிளம்பிச் செல்கிறது.
இந்த விமானங்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மட்டும் 140 பயணிகள் பயணிக்கும் வசதி உள்ளது. மற்ற விமானங்களில் 70 பயணிகளே பயணிக்க முடியும்.
அதிகரித்த பயணிகள்...
மதுரையில் இருந்து தினமும் குறைந்தது 800 பேராவது விமானத்தில் பயணிக்கின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மதுரை விமான நிலையத்திலிருந்து பயணிக்க குறைந்தது 900 பேர் வரையில் முன்பதிவு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
முன்பதிவு செய்வோரில் குறைந்தது 50 பேருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை தினமும் ஏற்படுவதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
தனியார் விமான நிறுவனம் தனது சேவையை சில மாதங்களுக்கு முன் திடீரென நிறுத்தியதால் மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகர்களுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
விமான சேவை குறைந்ததால் முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தனியார் விமான நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
தனியார் விமான நிறுவனங்கள் சேவையைக் குறைத்துக் கொண்டுள்ளதால் கூடுதலாக இரு விமானங்களையாவது இயக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மதுரைவாசிகள்