குடிநீர் இணைப்பில் மோசடி - நெல்லை மேயரிடம் மு.க. ஸ்டாலின் விசாரணை
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பில் 55 லட்சம் ரூபாய் மோசடி நடந்ததாக கூறப்படுவது குறித்து மேயர் சுப்ரமணியம் மற்றும் திமுக கவுன்சிலர்களிடம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடத்தவுள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் 17 வது வார்டு பகுதி குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், கட்டணமும் செலுத்தாமல் முறைகேடாக நூற்றுக்கணக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில், ரூ 55 லட்சம் மோசடி நடைபெற்றதாக தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த தமிழக நகராட்சிகளின் நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் நெல்லை வந்து விசாரணை நடத்தினார்.
தங்கள் நிலை குறித்து விளக்க தி.மு.க மேயர் சுப்பிரமணியன் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் சென்னையில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து விளக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நிதி மோசடியில் கவுன்சிலர்கள், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இளநிலை என்ஜினியர்களை சஸ்பெண்ட் செய்தது தவறு என்று என்று நெல்லை மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர்.
மேயர், கவுன்சிலர்களை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் சங்க நிர்வாகிகளும் தங்கள் பிரச்னையை துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் தர திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.