வட இலங்கை வேலையில்லாத் திண்டாட்டம்-போக்க இந்திய உதவியுடன் புதுத் திட்டம்
கொழும்பு: போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், தமிழர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கும் வகையிலும் புதிய திட்டம் ஒன்றை இந்தியாவின் உதவியுடன் இலங்கை தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் இதுதொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இரு தரப்பு கூட்டுச் செயல்பாட்டு ஒப்பந்தம் நிறைவேறியதாம்.
தற்போது இந்தத் திட்டத்தை வடக்கில் வசந்தம் என்ற பெயரில் ராஜபக்சே அரசு அமல்படுத்தியுள்ள திட்டத்தின் கீழ் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனராம்.
ஏற்கனவே சாலை மேம்பாடு, கட்டுமானப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அத்துடன் தற்போதைய புதிய திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இலங்கை அரசின் கட்டுமானம் மற்றும் பொறியியல் சேவை அமைச்சகத்தின் கீழ் வரும் கட்டுமானப் பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்திற்கும், இந்திய அரசின் கட்டுமானத் துறை வளர்ச்சிக் கவுன்சிலுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தத் திட்டத்தின் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் தமிழர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பது குறித்து இலங்கை அரசு தெரிவிக்கவில்லை.