ஆடிப்பெருக்கு - காவிரியில் குளித்த நால்வர் பலி
சேலம்: ஆடிப்பெருக்கு விழாவின்போது காவிரி ஆற்றில் குளித்த நான்கு இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரின் கதி தெரியவில்லை.
நேற்று ஆடிப் பெருக்கு விழா காவிரிக் கரையோரப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அதேபோல நாமக்கல் மாவட்ட காவிரிக் கரையிலும் ஆடிப் பெருக்கு கொண்டாடப்பட்டது.
வேலகவுண்டன் பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற 17 வயது வாலிபர், ஆடிப்பெருக்கை யொட்டி, தனது நண்பர் மணிகண்டனுடன், ஆனங்கூர் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது இருவரும் சுழலில் சிக்கி கொண்டனர். அவர்களை தண்ணீர் அடித்து சென்று விட்டது. இதில், ரஞ்சித்குமார் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மணிகண்டனை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதுபோல மோகனூரை சேர்ந்த செந்தில் குமார்(23) என்ற வாலிபர், செங்கத்துறை காவிரி ஆற்றில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் அவர் வெள்ளத்தில் சிக்கி இறந்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள கோணரம்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(23) என்ற வாலிபர், நேற்று அதிகாலையில் இடைப்பாடி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது சிவகுமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் வையப்பமலையை சேர்ந்த மணிகண்டன்(24) என்ற வாலிபர் ஜேடர்பாளையத்தில், காவிரி ஆற்றில் குளித்தபோது, காணாமல் போய் விட்டார். அவரையும் தேடி வருகின்றனர்.