ரவுடி பாபா என்கவுண்டர்-நீதி விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: பிரபல தாதா பாபா என்கிற சுரேஷ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நதிமன்றம் கூறி விட்டது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவன் பாபா சுரேஷ் (32). பிரபல ரவுடி. இவன் மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் இருந்தன. எனவே, ஆர்.கே.நகர் போலீசார் இவனை கைது செய்தனர்.
உடல் நலக்குறைவு காரணமாக அவனை சென்னை பொது மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி மருத்துவமனையிலிருந்து பாபா தப்பிக்க முயன்றபோது போலீஸார் அவை சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே பாபா சுரேஷ் சுட்டு கொல்லப்பட்டதற்கு நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி அவனது மனைவி தேவி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு செய்திருந்தார்.
அதில், எனது கணவர் கைது செய்யப்பட்டிருந்தபோது அவரை பார்க்க என்னை போலீசார் அனுமதிக்கவில்லை. அவரை சுட்டுக்கொன்று விடுவோம் என்று என்னிடம் கூறி மிரட்டினர். அது போன்று அவர் தப்பி சென்றதாக கூறி என் கவுண்டரில் சுட்டு கொன்று விட்டனர்.
எனவே அவரது சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். மேலும் எனது கணவர் கொல்லப்பட்டதற்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இது மனு மீது நீதிபதிகள் முகோபாத்யாயா, ராஜ இளங்கோ ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது.
இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், தப்பி ஓட முயன்றபோதுதான் பாபா சுரேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதற்கான போலீஸ் ஆவணங்கள் தெளிவாக உள்ளன. இதனால் தேவியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.