சென்னையில் 1,000 கண்காணிப்பு கேமராக்கள்!
தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், தடுக்கவும் இந்த முறை உதவும் என எதிர்பார்க்கிறோம்.
62வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை உள்பட தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் சென்னை செம்மஞ்சேரியில் நடந்த போலீஸ் நிலைய திறப்பு விழாவில் கூறுகையில்,
தீவிரவாதிகள் மிரட்டல் இல்லாவிட்டாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 15ம் தேதிக்கு ஒருவார காலத்துக்கு முன்பிருந்தே சென்னை முழுவதும் தீவிர வாகன சோதனை, லாட்ஜூக்களில் சோதனை, சந்தேகத்துக்கிடமான இடங்கள் கண்காணிப்பு என பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
சுதந்திர தினத்தையொட்டி நகர் முழுவதும் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து அது போன்ற அசம்பாவித சம்பவத்தைத் தடு்க்க சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய 6 பெருநகரங்களில் தீவிரவாத எதிர்ப்பு கமாண்டோ படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல் நவீன பாதுகாப்பு வசதிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய உள்துறை. இதில் சென்னைக்கு மட்டும் ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை கிடைக்க வாய்ப்புண்டு.
சென்னை நகர் முழுவதும் 1,000 இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணிப்பார்கள்.
தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கவும், தடுக்கவும் இந்த முறை உதவும் என எதிர்பார்க்கிறோம்.
சென்னையில் தீவிரவாததடுப்பு படை போலீசார் 260 பேர் உள்ளனர். அவர்களை 60 பேர் கொண்ட குழுவாக பிரித்து கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.
சென்னையில் அதிக மக்கள் கூடும் இடமான கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள், சிட்டிசென்டர் உள்ளிட்ட வணிக வளாகங்களின் வரைபடங்களை சேகரித்துள்ளோம். அவற்றின் நிர்வாகிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவல் போன்ற அவசர காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளோம்.
சென்னை மெகா சிட்டி என்ற போலீஸ் நவீன மயமாக்கல் திட்டத்துக்காக ரூ.7,000 கோடி கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு வாகனங்களின் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்தது. தற்போது 31 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களை விட சென்னையில்தான் அதிக வாகனங்கள் உள்ளன.
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதற்காக கூட்ட நெரிசலான சாலையில் இருக்கும் மரங்களை அகற்றுவது குறித்தும், பஸ் நிறுத்தங்களை மாற்றியமைப்பது குறித்தும் யோசித்து வருகிறோம்.
அதேபோல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றின் விடுமுறை நாட்களை ஞாயிற்றுக்கிழமை அல்லாத இதர நாட்களில் மாற்றியமைக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
சென்னை நகரில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தவிர்த்து 84 காவல் நிலையங்கள் உள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையம் 85வது காவல் நிலையமாகும்.
மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரிவில் போதிய அளவு போலீசார் உள்ளனர். குற்றப் பிரிவில் மட்டுமே காவலர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தப் பிரிவுக்கு விரைவில் அதிக எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை என்றாலும், இரவு பணிதான் அவர்களுக்கு அதிகமாக உள்ளது. அவர்களுக்கான பணியை இலகுவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.