பில் கிளின்டன் திடீர் வட கொரியா பயணம்
தென் கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுடன் எந்த நேரத்திலும் மோதலுக்குத் தயாராக இருக்கும் நாடு வட கொரியா. அவ்வப்போது அமெரிக்காவை வெறுப்பேற்றுவதற்காக ஏவுகணை சோதனை, அணு குண்டு தயாரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது வட கொரியா.
தாக்குவோம், அழிப்போம் என்று அமெரிக்கா மிரட்டினாலும் சீனாவின் முழு ஆதரவு இருப்பதால் மிக தைரியமாக உள்ளது அந் நாட்டு கம்யூனிஸ சர்வாதிகார அரசு.
வட கொரியா-அமெரிக்கா இடையிலான உறவு ஜார்ஜ் புஷ் காலத்தில் தான் மிகவும் கீழ் நிலைக்குச் சென்றது. ஒபாமா அதிபரான பின்னர் உறவை கொஞ்சம் சீர்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளார்.
இந் நிலையில் பில் கிளின்டன் மிக ரகசியமாக வட கொரியா சென்றுள்ளார். அந் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு அமெரிக்க நிருபர்களை மீட்க அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பில் கிளின்டன் காலத்தில் துணை அதிபராக இருந்த அல்-கோர் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கியுள்ள கரண்ட் டிவியில் பணியாற்றி வந்த இயூனா லீ, லாரா லிங் ஆகிய இரு நிருபர்களும் கடந்த மார்ச் மாதத்தில் சீன-வட கொரிய எல்லையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது வட கொரிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
வட கொரியாவை உளவு பார்த்ததாக இருவரும் கைதாகினர். இருவரையும் 12 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளது வட கொரிய ராணுவ அரசு.
இந் நிலையில் இவர்களை விடுவிக்கக் கோரி வட கொரியாவிடம் பேச பில் கிளின்டன் அங்கு சென்றுள்ளார். வட கொரிய அரசு சம்மததித்தன் பேரிலேயே கிளின்டன் அங்கு சென்றுள்ளார்.
அமெரிக்கா-வட கொரியா இடையே தூதரக உறவு இல்லாத நிலையில், கிளின்டனின் மனைவி தான் இப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ள நிலையில், பில் கிளின்டனின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நிருபர்களை மீட்க கிளின்டன் அங்கு செல்வதாகக் கூறப்பட்டாலும் அதிபர் ஒபாமாவின் ஆதரவுடன் இரு நாட்டு உறவுகளை கொஞ்சமாவது சீர் செய்யும் முயற்சிகளில் அவர் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
கிளின்டனின் இந்தப் பயணத்தின் பின்னணியில் அமெரிக்க அரசும் அதிபரும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இன்று காலை பியோங்யாங் வந்து சேர்ந்த கிளின்டனை வட கொரியாவின் மூத்த அதிகாரிகளும் அந் நாட்டு அணு ஆயுத விவகாரத்துக்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான கிம் கெ குவானும் வரவேற்றனர்.
இதன்மூலம் அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்காவுடன் விட்டுக் கொடுத்து போகத் தயார் என்பதை வட கொரியா சுட்டிக் காட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.