தீப்பெட்டி ஆலைகள் மூடல்-'கஞ்சித் தொட்டி' திறந்த அதிமுக
கடந்த அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் நூல் தட்டுப்பாடு காரணமாக வேலை இழந்தபோது திமுக சார்பில் அவர்களுக்கு உணவு அளிப்பதற்காக 'கஞ்சித் தொட்டி' திறக்கப்பட்டது. இந்தத் தொட்டிகளைத் திறந்த திமுகவினரை போலீசாரை விட்டு அடித்து உதைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
இந் நிலையில் இப்போது தீப்பெட்டித் தொழிலாளர்களுக்காக அதிமுக 'கஞ்சித் தொட்டி' திறந்துள்ளது.
தமிழகத்தில் சிவகாசி, கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2500க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தீப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருள் பொட்டாசியம் குளோரைட். ஆனால் இந்த மூலப்பொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
புதுச்சேரியிலிருந்து அந்த மூலப்பொருள் சப்ளை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதால் இந்த ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வருமானமின்றி வறுமையில் வாடும் அந்த தொழிலாளர்களுக்காக, அதிமுக சார்பில் இலுப்பையூரணி வி.ஏ.ஓ. அலுவலக வளாகத்தில் 'கஞ்சித் தொட்டி' திறப்பு போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி அதிமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் இந்தக் கஞ்சித் தொட்டியை திறந்து வைத்தார். தீப்பெட்டி ஆலைத் தொழிலாளர்கள் இந்த கஞ்சியை வாங்கிச் சென்றனர்.
அருகே உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதி்முகவின் 'கஞ்சித் தொட்டி' திறப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.