விநாயகர் சதுர்த்தி-ரசாயணம் பூசிய சிலைகள் கூடாது
சென்னை: விநாயகர் சதுர்த்தியின்போது ரசாயண வண்ணம் பூசப்பட்ட சிலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
விநாயகர் சதுர்த்தியின்போது களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை செய்து பூஜித்த பிறகு அதை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாக ரசாயண வண்ணம் பூசப்பட்ட சிலைகளை கரைப்பதால் நீர் நிலைகள் மாசுபடுகின்றன.
எனவே பொது மக்கள் களி மண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத, எந்தவித ரசாயணமும் பூசப்படாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கலாம்.
பெயிண்ட் உள்ளிட்ட ரசாயணம் பூசப்பட்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
கடலோரத்திலும் ஏரிகளிலும் சிலைகளைக் கரைக்காமல் கடலில் 500 மீட்டர் தூரம் அதை கொண்டு சென்று அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் கரைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.