கிளின்டன்-கிம் பேச்சு: இரு யுஎஸ் நிருபர்களும் விடுதலை
இது இரு நாடுகளுடனான உறவின் மாபெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது.
பில் கிளின்டன் காலத்தில் துணை அதிபராக இருந்த அல்-கோர் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கியுள்ள கரண்ட் டிவியில் பணியாற்றி வந்த இயூனா லீ, லாரா லிங் ஆகிய இரு பெண் நிருபர்களும் கடந்த மார்ச் மாதத்தில் சீன-வட கொரிய எல்லையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது வட கொரிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
வட கொரியாவை உளவு பார்த்ததாக இருவரும் கைதாகினர். இருவரையும் 12 ஆண்டுகள் சிறையில் அடைத்தது வட கொரிய ராணுவ அரசு.
இதையடுத்து அவர்களை மீட்க வட கொரியா அதிபருடன் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்தார் பில் கிளின்டன். கிளின்டனின் கோரிக்கையை கிம் ஜோங் ஏற்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று தென் கொரியா வந்த கிளின்டன் சிறப்பு விமானத்தில் வட கொரிய தலைநகர் பியோங்யாங் சென்றார்.
இரு தலைவர்களும் நேற்று மாலை சந்தித்துப் பேசினர். அப்போது இரு நிருபர்களும் அனுமதியில்லாமல் வட கொரிய எல்லைக்குள் நுழைந்ததை கிம் விளக்கினார். அதற்காக கிளின்டன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து இரு நிருபர்களுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாக கிம் அறிவித்தார்.
மேலும் தனது இந்தச் சந்திப்புக்கு அமெரிக்க அரசின் ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்த கிளின்டன் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்கா விதித்துள்ள தடைகள், வட கொரியாவுக்கு விடுத்து வரும் மிரட்டல்கள் குறித்து கிம் தெரிவித்த வருத்ததையும் கிளின்டன் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த மோதல் போக்கை இரு நாடுகளும் படிப்படியாக கைவிட வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.
நிருபர்களின் விடுதலைக்காக வட கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும் நன்றி தெரிவித்துள்ளதோடு இரு நாட்டு உறவு வலுப்பட பாடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.