திருவள்ளுவர் சிலைத் திறப்புக்கு தடை விதிக்க முடியாது- கர்நாடக உயர்நீதிமன்றம்
பெங்களூரில் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் சிலை வருகிற 9ம் தேதி திறக்கப்படுகிறது. இதை எதிர்த்து சில கன்னட அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், சில கன்ன அமைப்புகள், கன்னட ஆர்வலர்கள் இணைந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிலை திறப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தன.
கன்னட சலுவளி வட்டாள் கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ், கர்நாடக ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பிரபாகர ரெட்டி, தலித் தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், பூங்காவில் சிலைகள் நிறுவக் கூடாது என்று கர்நாடக நகர்ப்புற திட்ட சட்டம் மற்றும் பூங்காக்கள் பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை மீறி சிலை நிறுவப்பட வேண்டுமானால் திட்ட ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
ஆனால் இதை எதையும் செய்யாமல் சிலை திறக்க முயல்வது சட்டவிரோதமாகும். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்து விட்டது.
இதுகுறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாடுவதை அனுமதிக்க முடியாது. இரு மாநில உறவுகளை கெடுக்கும் வகையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது, அதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தது.