4வது கட்ட நிவாரணப் பொருட்கள்-கப்பல் கொழும்பு கிளம்பியது
உணவு பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி-சேலைகள் அடங்கிய ரூ. ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் மூலம் இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
இந்தக் கப்பல் இன்று காலை 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 8ம் தேதி இது கொழும்பு சென்றடையும்.
இந்த நிவாரணப் பொருட்கள் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினரால் தமிழர்களுக்கு வழங்கப்படும்.
நாடு திரும்பும் இந்திய டாக்டர்கள் குழு:
இந் நிலையில் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது அதில் காயமடைந்த தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க 6 மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ டாக்டர்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
அவர்கள் திரிகோணமலை மாவட்டம் புல்மொட்டை என்ற இடத்தில் தற்காலிக மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பின்னர் இந்த மருத்துவமனை வவுனியா மாவட்டம் செட்டிகுளத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள அகதி முகாமில் தங்கியிருந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந் நிலையில் தங்களது பணிகள் முடிந்துவிட்டதால் இப்போது இந்தக் குழு இந்தியா திரும்புகிறது.