ரூ. 8.53 லட்சம் லஞ்சம்-இ.எஸ்.ஐ. பெண் இயக்குனர் கைது
சென்னை: சென்னையில் லஞ்சம் வாங்கியதாக இ.எஸ்.ஐ. பெண் அதிகாரி எழிலரசி கைது செய்யப்பட்டுள்ளார்.
எழிலரசி, இ.எஸ்.ஐ.யின் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைப் பிரிவின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
57 வயதாகும் இவருக்கு சில மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் ரூ. 8.53 லட்சம் லஞ்சப் பணத்தைக் (எழிலரசி ரூ. 10 லட்சம் கேட்டிருந்தாராம்) கொடுக்கப் போவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து எழிலரசியைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். அவரது அயனாவரம் வீட்டில் லஞ்சப் பணம் கைமாறியபோது எழிலரசியை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.
அவர் தவிர பல்வேறு மருந்து நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கீழ்ப்பாக்கம் கல்பேஸ் ஷா, பாடி புருஷோத்தமன் பாபு, உள்ளகரம் சீனிவாசன், அண்ணாநகர் ஆராவமுதன், கொசப்பேட்டை சுரேஷ் பாபு ஆகிய ஐந்து மருந்து நிறுவன ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மருந்துக் கம்பெனிகளுக்கு ரூ. 15 கோடி மதிப்பிலான ஆர்டரை தருவதற்காக ரூ. 10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் எழிலரசி. பேச்சுவார்த்தை நடந்து ரூ. 8.53 லட்சம் தர முடிவாகியதாம். அதன்படி பணத்தைக் கொடுக்க வந்தபோதுதான் அத்தனை பேரையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியில் உள்ள எழிலரசியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.