ஜெவிடம் 'கட்சி வளர்ச்சி நிதி' ரூ.1.4 கோடி அளிப்பு
இப்போது கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் ஜெயலலிதாவிடம் அதிமுக நிர்வாகிகள் இதை வழங்கினர்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ மற்றும் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து "கழக வளர்ச்சி நிதியாக'' 27 லட்சம் ரூபாய் வழங்கினர்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ரூ.20 லட்சத்து 7 ஆயிரமும், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் 16 லட்சத்து 65 ஆயிரத்து 9 ரூபாயும்,
சிவகங்கை மாவட்ட செயலாளர் சோழன் சித. பழனிச்சாமி மற்றும் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 16 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், விருதுநகர் மாவட்டக் செயலாளர் கே.கே.சிவசாமி மற்றும் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 15 லட்சம் ரூபாயும் வழங்கினர்.
அதே போல், மாணவர் அணி செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மாணவர் அணி துணைச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், எம்.எல்.ஏ., சோலை ரா.கண்ணன், எம்.டி.பாபு, புதுக்கோட்டை மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆர்.நெடுஞ்செழியன் எம்.எல்.ஏ. மற்றும் 14 மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் சார்பில் "கழக வளர்ச்சி நிதியாக'' 10 லட்சம் ரூபாய் வழங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அன்வர்ராஜாவுக்கு புது பதவி:
இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த லியாகத் அலிகான் விலகிவிட்டதையடுத்து நீண்ட நாட்களாக பதவி காலியாக இருந்தது.
அதே போல அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிலிருந்து நீக்கியுள்ள ஜெயலலிதா, அவரை அனைத்துலக எம்ஜிஆர் மன் துணைச் செயலாளராக நியமித்துள்ளார்.