போட்டி.. விஜய்காந்துக்கு அழகிரி சவால்!
இளையான்குடி இடைத் தேர்தலையொட்டி அப் பகுதி திமுக செயல்வீரர்களின் கூட்டத்தில் பேசிய அழகிரி,
இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த துரோகத்தால் வந்த இடைத் தேர்தல் இது (திமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ கண்ணப்பன் அதிமுகவில் சேர்ந்தார்). எம்எல்ஏ ஆகி அமைச்சராகிவிடும் கனவுடன் தான் அவர் திமுகவுக்கு வந்தார்.
அது கிடைக்காததால் இங்கிருந்து சென்றுவிட்டார். அவருக்கு பதவி கொடுத்தால் நான் கட்சியில் இருக்க மாட்டேன் என்று நான் தான் தலைமையை தடுத்து நிறுத்தினேன்.
இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சி போட்டியிடவில்லை. ஆனால் வாக்களிக்க வேண்டாம் என்று தடுக்க யாருக்கும் உரிமையி்ல்லை.
திமுக கூட்டணி எந்த சாதனையும் செய்யவில்லை என்று ஒருவர் (விஜய்காந்த்) பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு தைரியமிருந்தால் வரும் பொதுத் தேர்தலில் மதுரையில் என்னை எதிர்த்துப் போட்டியிட வேண்டும். நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் கூட அவரை எதிர்த்துப் போட்டியிடத் தயார்.
நான் அமைச்சரானவுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து விவசாயிகளுக்கு உர மானியத்தை நேரடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்தேன். இங்குள்ள தொண்டி நகரில் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இது போன்ற திட்டங்கள் தான் நமது வெற்றியின் ரகசியம் என்றார் அழகிரி.