மாணவிக்கு அடி-தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிளஸ் டூ மாணவியை முடியைப் பிடித்து இழுத்து, அடித்த தலைமை ஆசிரியை சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
நாகர்கோவில் கோட்டார் கவி்மணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா அந்தப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி மலர்பிரியா தங்க செயின் அணிந்து வந்தார் என்ற காரணத்துக்காக கடந்த 31ம் தேதி தலை முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அடித்துள்ளார்.
இதையடுத்து பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த புகார் மனுவில் தலைமை ஆசிரியை சசிகலா பொது இடத்தில் வைத்து மாணவிகளின் துப்பட்டாவை அகற்றி கழுத்தில் அணிந்திருந்த செயினை துண்டு துண்டாக அறுத்து வீசினார். மாணவிகளை தரக்குறைவாக நடத்தும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
புகாரை பெற்ற கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஊர்வலமாக சென்று போலீசிலும் புகார் செய்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின்பேரின் தடுத்து நிறுத்துதல, தாக்குதல் என இரண்டு பிரிவுகளின் கீன் தலைமை ஆசிரியை மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகள், தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு, அதிகாரிகள், மாணவிகளின் பெற்றோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த தொடர் விசாரணைக்கு தலைமை ஆசிரியை சசிகலாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.