இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் - ஆஸி. பிரதமர்
சகு கெய்ன்ஸ் (ஆஸி.): ஆஸ்திரேலியாவில் படிக்கும், படிக்க வரும் இந்திய மாணவர்களின் முழுமையான பாதுகாப்புக்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், இந்திய மாணவர்கள் அச்சமின்றி ஆஸ்திரேலியாவில் படிக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு உறுதி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வந்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, கெவின் ரூட்டை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, இந்திய மாணவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்திரேலிய பிரதமர் என்னிடம் அளித்த உத்தரவாதங்கள் திருப்தி அளிப்பதாக உள்ளன.
இந்திய மாணவர்கள் தொடர்பான பிரச்சினையின் தீவிரத்தை அவர் முழுமையாக உணர்ந்துள்ளார். இனவெறித் தாக்குதல் தொடர்பான தீர்வு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் ரூட் தெரிவித்தார்.
எந்தவித நிலைமையையும் சமாளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசும், நிர்வாகமும் இருப்பதாக நான் திருப்தி அடைந்துள்ளேன்.
இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு என்று ரூட் பாராட்டு தெரிவித்தார். மேலும், இங்கு படிக்க வரும், படித்து வரும் இந்திய மாணவர்கள் முழுமையாக பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்றார்.