கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான எஸ்.எஸ்.பர்னாலாவுக்குப் புகார்கள் பறந்தன. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
இருப்பினும் தமிழக அரசின் அனுமதிக்காக போலீஸார் காத்திருந்தனர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார், ராதாகிருஷ்ணனின் வீட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
கோவை, ஜோதிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மெயின் அலுவலகம், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் அலுவலகம், ராதாகிருஷ்ணனின் மனைவி நடத்தி வரும் பவுண்டேஷன் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.
இதில் என்ன கைப்பற்றப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.