அதிக வாக்குகள்..காங்கிரசிலும் தங்கம் பரிசு!
தென் மாவட்டங்களில் உள்ள மூன்று சட்டசபைத் தொகுதிகளில் எந்த தொகுதியில் கூடுதல் வாக்குகளை திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெறுகிறார்களோ அந்த மாவட்ட திமுக செயலாளர்களுக்கு 25 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசு தரப்படும் என மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இந் நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.என்.கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கோவை வந்த தங்கபாலு நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெரும் வகையில் சிறப்பாக தேர்தல் பணியாற்றும் மாவட்ட தலைவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் வெற்றி நிச்சயம்.
சில கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் எந்தவித கோஷ்டி அரசியலும் இல்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்த வேட்பாளர்கள் தான் போட்டியிடுகிறார்கள். அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் கடமை.
மாவட்ட அளவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் விரைவில் மாற்றப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகளவில் இளைஞர்களை கட்சியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.