சென்னை துறைமுக மாஜி தலைவர் சுரேசிடம் ரூ. 50 கோடி
சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷின் லாக்கர்கள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது குவியல் குவியலாக தங்க நகைகள் சிக்கின. அவர் ரூ. 50 கோடி அளவுக்கு சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சுரேஷ் மீது சி.பி.ஐ. போலீசார் அதிகார துஷ்பிரயோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது அதிகார துஷ்பிரயோகத்தால் சென்னை துறைமுகத்துக்கு அவர் ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அதிகாரி சுரேசின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அப்போது, ரூ.2.75 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கப்பணம், மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
பின்னர் நான்கு வங்கிகளில் சுரேஷுக்கு லாக்கர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று 2 வங்கி லாக்கர்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
ஒரு லாக்கரில் மட்டும் 1 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 லாக்கர்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் முடிந்த பிறகு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 4.5 கிலோ தங்க நகைகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். சுரேசின் மனைவி விதம்,விதமான தங்க நகைகளை வாங்கி அணிவாராம். அவர்தான் நகைகளை வாங்கி குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷின் மெகா சொத்துக் குவிப்பு...
இதற்கிடையே, சுரேஷ் மிகப் பெரிய அளவில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரூ. 50 கோடிக்கும் மேலான சொத்துக்களை அவர் வாங்கிக் குவித்துள்ளாராம்.
சென்னை கொட்டி வாக்கம் ஏ.ஜி.எஸ். காலனியில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 ஆயிரம் சதுர அடி வீட்டு மனையை தனது மனைவி கீதா மற்றும் தனது பெயரில் கடந்த ஜுன் மாதம் வாங்கியுள்ளார். இதற்கு பத்திரச்செலவு மட்டும் ரூ.12 லட்சம் என தகவல் தெரிகிறது.
சென்னை சூளைமேட்டில் சுரேஷ் குடியேற உள்ள வீட்டில் இருக்கும் ஆடம்பர பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
102 அங்குல ராட்சத டி.வி., 400லிட்டர் கொள்ளவு கொண்ட பிரிட்ஜ், 16 ஏர்க ண்டிசைனர் போன்றவை இதில் அடங்கும்.
கொடைக்கானலில் சொகுசு பங்களா, வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தில் விவசாய நிலங்கள்,பெங்களூர் பன்னர் கட்டா பகுதியில் 2 கிரவுண்டு நிலத்தில் பங்களா, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வீடு போன்றவற்றை வாங்கியதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
சுரேஷ் வீட்டில் நடந்த சோதனையின் போது 100 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட், அதிக விலை மதிப்பு கொண்ட 3 வைர நகைகள், ஐ போன்கள் மற்றும் வெளிநாட்டு பொருட்களும் சிக்கியுள்ளன. விசாரித்த போது இவை அனைத்தும் அன்பளிப்பாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுரேஷ் துறைமுக பொறுப்பு கழக தலைவராக இருந்த போது வாங்கிய சம்பளம் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து பணத்தை பல மாதங்களாக சுரேஷ் எடுக்கவில்லை.
சம்பளத்தை எடுக்காமலேயே சுமார் 50 கோடி வரை சொத்து சேர்ந்துள்ளதாக கூறப்படுவது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.