கர்ப்பிணி வேடத்தில் குழந்தை கடத்தல்-பெண் கைது
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கர்ப்பிணி வேடத்தில் வந்த இளம்பெண் கடத்தி செல்ல முயன்றார். அவர் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள முத்தாலங்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார் மனைவி உச்சினிமாகாளி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கர்ப்பிணியான உச்சினிமாகாலிக்கு கடந்த 26ம் தேதி மியான்பள்ளி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
உச்சினிமாகாளிக்கு உடற்நலக்குறைவு ஏற்படவே கடந்த 30ம் தேதி தாயையும், சேயையும் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றிரவு 10 மணி அளவில் பிரவசத்திற்கு சேருவது போல் ஒரு கர்ப்பிணி பெண் உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்தார். பிரவச வார்டிலிருந்த உச்சினிமாகாளியிடம் நன்கு தெரிந்தவர் போல் அவர் பேச்சு கொடுத்தார்.
திடீரென உச்சினிமாகாளியை திசை திருப்பி அவரது குழந்தையை திருடிக் கொண்டு மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடி்த்தார். அவருடன் வந்த மற்றவர்களும் அவரை பின் தொடர்ந்து ஓடினர். கர்ப்பிணி பெண் குழந்தையுடன் ஓடுவதை பார்த்து சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை விரட்டிச் சென்று குழந்தையை கடத்தி சென்ற 5 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஓப்படைத்தனர்.
கடத்தல் கும்பலிடம் இருந்து குழந்தையை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சேர்ந்த அமுதா, அவரது மகள்கள் மாலா, சரண்யா, இவரது கணவர் நடராஜன், தம்பி குமார் என்பது தெரிய வந்தது.
சரண்யாவுக்கு குழந்தை இல்லை. இதனால், 5 பேரும் அம்பாசமுததிரத்தில் இருந்து திட்டமிட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து குழந்தையை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் மருத்துவமனையில் இருந்தவர்கள் பிரவச வார்டு அருகில் திரண்டு முற்றுகையிட்டனர். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.