போலீசுக்கு மயக்க மருந்து கொடுத்து 6 கைதிகள் ஓட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்காபூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு குளிர் பானத்தில் மயக்கமருந்து கொடுத்து 6 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் துணை சிறையில் பிஜோய் சிங், விக்கி சிங், தர்மேந்திர பர்வான், சந்தோஷ் பர்ன்வால், சின்டு சிங், ராஜேந்திர சிங் உள்ளிட்ட 6 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த சிறைக்கு இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த 5 பேர் தங்களது நண்பர் பிஜோய் சிங்கிற்கு பிறந்த நாள் என்றும், அவரை பார்க்க வேண்டும் எனவும் கூறி முறைப்படி அனுமதி கேட்டனர்.
இதையடுத்து அவர்கள் பிஜோய் சிங்கை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பிஜோய் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு போலீசாருக்கு குளிர் பானம் வழங்குவதாக கூறினர். பின்னர் போலீசாருக்கு மயக்கமருந்து கலந்த குளிர் பானங்களை கொடுத்தனர்.
அதை குடித்த போலீசார் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்த பிஜோய் சிங் உள்ளிட்ட 6 கைதிகளையும் அழைத்து கொண்டு தப்பியோடினர். மயக்கம் தெளிந்து எழுந்த போலீசார் அருகில் இருக்கும் காட்டு பகுதியில் அவர்களை தேடி வருகின்றனர்.