நகைத் தொழிலாளர்கள்... சோகத்திலும் ஒரு சின்ன ஆறுதல்!
டெல்லி: ஒருவரின் நஷ்டம் அடுத்தவரின் லாபமாகிறது. உலகப் பொருளாதாரம் சரிந்து ஐடி, வங்கித் துறை பெரும் கஷ்டத்தில் தவிக்க, குறிப்பிட சில தொழில்களில் உள்ளவர்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அவர்களில் நகைத் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தத் துறையும் லே ஆப் எனும் நெருக்கடிக்குத் தப்பவில்லை. இந்த ஆண்டு மட்டும் 1.65 சதவிகித தொழிலாளர்களுக்கு வேலை பறிபோயிருக்கிறது. ஆனாலும், இப்போது அந்தத் தொழிலில் நீடிப்பவர்களுக்கு கிடைத்துள்ள சந்தோஷம், திடீர் சம்பள உயர்வு.
சர்வதேச பொருளாதார மந்தம் இந்திய வேலைவாய்ப்பில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எனும் தலைப்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, நகைத் தொழிலாளர்கள் வருவாயில் இந்த மந்தக் காலத்தில் மட்டும் 4.68 சதவிகித உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேரடியாக கள ஆய்வு செய்ததில், இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள நகைத் தொழிலாளர்களுக்கு இருமடங்கு அதிக ஊதிய உயர்வும் கிடைத்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், நகைத் தொழில் என்பது தனித் திறமை சார்ந்ததாக இருப்பதுதான். இந்தத் தொழிலுக்கான ஆட்கள் முழுக்க பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே பணியிழப்பு ஏற்பட்டாலும் கூட, இங்கே ஊதியக் குறைப்பு சாத்தியமில்லை என்கிறது அந்த ஆய்வு.
இதே போல ஆட்டோமொபைல் தொழிலிலும் 5 சதவிகித ஊதிய உயர்வு ஏற்பட்டுள்ளது. தோல் பொருட்கள் தொழிற்சாலை, உலோகத் தொழிற்சாலை சார்ந்த பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு காணப்படுகிறது.
ஆனால ஐடி, வங்கிகள், பிபிஓ, ஜவுளித் துறை, போக்குவரத்து, கைத்தறி துறைகளில் பெருமளவு வேலைக் குறைப்புடன், ஊதியக் குறைப்பும் ஏற்பட்டுள்ளது.