வாக்குசீட்டு முறை தான் இந்தியாவுக்கு ஏற்றது-மதுரை ஆதினம்
காஞ்சிபுரம்: மின்னணு வாக்குப்பதிவு முறையை பல நாடுகள் தவிர்த்துவிட்டன. இந்தியாவுக்கு வாக்குசீட்டு முறை தான் நல்லது. அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதினம் ஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று காஞ்சிபுரம் வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இடைத்தேர்தலால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இடைத்தேர்தல்களை நடத்தாமல் அவற்றை பொது தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும். அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதை பல நாடுகள் தவிர்த்து விட்டன. நாமும் அதை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். அது தான் அனைவருக்கும் நல்லது.
இந்துக் கோயில் சொத்துகளை பலர் குத்தகை பாக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் பணத்தை வசூலித்து கோயில் சொத்துகளை முறைப்படுத்தி வருவாயைப் பெருக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து வாரியம் அமைக்க வேண்டும்...
கோயில்களை நிர்வாகம் செய்ய பீடாதிபதிகள், ஆதீனங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய வாரியத்தை அரசு அமைக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தை வாரியத்தின் கையில் ஒப்படைத்து, தணிக்கையை மட்டும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் மூலவருக்கு பதிலாக உற்சவருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இது கூடாது. மூலவருக்குத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
காவிரிக்கு தீர்வு காண உதவும்...
ஸ்டாலினை தமிழக துணை முதல்வராக நியமித்தது வரவேற்கத்தக்கது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்டது இரு மாநில மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். காவிரிப் பிரச்னை தீரவும் வகை செய்யும்.
தற்போது மழைவளம் குறைந்துவிட்டது. அதிக மழை பெய்வதற்காக திருநாவுக்கரசர் இயற்றிய மழைப் பதிகத்தை கூட்டு வழிபாடு முறையில் பாட வேண்டும் என்றார் மதுரை ஆதீனம்.