கற்பைப் போல எண்ணி வாக்களிக்க வேண்டும் - இல.கணேசன்
ஸ்ரீவைகுண்டம்: வாக்காளர்கள் கற்பைப் போல எண்ணி தூய மனதுடன் வாக்களிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாஜக வேட்பாளர் சந்தனகுமாரை ஆதரித்து புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் இல.கணேசன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தேர்தல் என்றாலே வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். தொண்டாமூத்தூர், பர்கூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய சென்றேன். அந்த தொகுதிகளில் ஆளூம் கட்சியினர் சார்பில் வீடு வீடாக சென்று பணம் விநியோகிக்கப்படுகிறது. தேர்தல் வேலை என்ற வார்த்தைக்கே இப்போது அர்த்தம் மாறி விட்டது.
திருமங்கலம் பார்முலா என்பது அரசியலில் புதிதாக இணைந்த கெட்ட வார்த்தை, வாக்காளர்கள் இந்த பார்முலாவை நம்ப கூடாது. மனசாட்சி படி வாக்காளர் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதை கற்பை போல எண்ணுங்கள். அதை மாசுப்படுத்த இடம் கொடுக்காதீர்கள்.
ஐனநாயகத்தை நம்பாதவர்கள்தான் தேர்தலில் பணம் கொடுக்கின்றனர். தேர்தல் ஆணையம் வெறும் சீறும் பாம்புதான். அது தவறு செய்பவர்களை கொட்டாது என்றார்.