வேட்டி, சேலைக்கு ஓட்டு கேட்பது தான் சாதனையா?-விஜயகாந்த்
கம்பம்: சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் வேட்டி, சேலைகளை கொடுத்து ஓட்டு கேட்பது தான் சாதனையா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்துவிட்டதால் திமுக, தேமுதிக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் தங்களது கட்சியின் வாக்குகளை வெகுவாக அதிகரிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் விறுவிறு பிரசாரம் செய்து வருகிறார்.
கம்பம் தொகுதியில் வேட்பாளர் அருண்குமாரை ஆதரித்து நேற்று இரண்டாவது நாளாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவினர் வீடுகள் தோறும் வேட்டி, சேலைகளை இலவசமாக கொடுத்து வருகின்றனர். ரூ. 500 பணம் கொடுக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் இந்த பணத்தில் ஏறிய விலைவாசி இறங்கிவிடுமா?
சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் வேட்டி, சேலைகளை கொடுத்து ஓட்டு கேட்பது தான் சாதனையா?
இது வரவழைக்கப்பட்ட தேர்தல்...
சுயலாபத்துக்காக கட்சி மாறி செல்லும் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் தொகுதிகளில் இடைத்தேர்தலே நடத்தக்கூடாது. ஒரு எம்எல்ஏ மரணம் அடைந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தல் வரவழைக்கப்பட்ட தேர்தல். மக்கள் வரிப்பணத்தை தேவையின்றி செலவிடும் தேர்தல்.
வாக்காள பெருமக்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். காசுக்கு ஓட்டுபோடாதீங்க, நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க என்றார் விஜயகாந்த்.