நீதிபதிக்கு வீட்டுகாவல்-முஷாரப் மீது எப்ஐஆர்
இஸ்லாமாபாத்: அவசர நிலை காலத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியை வீட்டு காவலில் வைத்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வெஸ் முஷாரப் மீது அந்நாட்டு போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
கடந்த நவம்பர் 2007ல் நடந்த மறுதேர்தலில் முஷாரப் வெற்றி செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில் அதிபர் முஷாரப் அவசரநிலை பிரகடனம் செய்தார்.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் முகமது செளத்ரி உள்ளிட்ட 80 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்துவிட்டு, அவர்களை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக முஷாரபை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று முகமது அஸ்லாம் கூமேன் என்ற வக்கீல் இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை முஷாரப் வீட்டுகாவலில் வைத்தது முறைகேடானது. முஷாரப் அரசு நீதிபதிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அவர்களின் குழந்தைகள் சிலரால் தேர்வு எழுத முடியாமல் போனது என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நேற்று முஷாரபுக்கு எதிராக எப்ஐஆர் பதிவுசெய்யும் படி போலீசுக்கு உத்தரவி்ட்டது. இதையடுத்து பிரிவு 344/34ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எண் 31 தேதி 10.08.2009 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தி நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
முஷாரப் கைது செய்யப்பட்டால் இது போன்ற காரணங்களுக்காக அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
தனது ஆட்சியின் போது நவாஸ் ஷெரீப் மற்றும் பெனசிர் புட்டோ ஆகியோரை நாடு திரும்பவிடாமல் செய்தார். எப்ஐஆர் போடபட்டுள்ளதால் தற்போது அவருக்கும் அதே போன்ற கதி ஏற்பட இருக்கிறது என செய்தி வெளியி்ட்டுள்ளது.