தைவானில் பயங்கர புயல்- நூற்றுக்கணக்கானோர் பலி
500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 38 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏராளமானவர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளித் தாக்கியலில் கிராமம் ஒன்று அப்படியே வெள்ள நீரில் சிக்கி மூழ்கி விட்டது. அதில் வசித்து வந்த யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏராளமான வீடுகள், தெருக்கள், பாலங்கள் நீரில் மூழ்கிப் போய் விட்டன. எங்கு பார்த்தாலும் பேரழிவாக காணப்படுகிறது. தண்ணீர் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கிறது.
தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் கடல் போல புகுந்துள்ளது.
தெற்கு கஹோசியுங் என்ற பகுதியில் உள்ள சியாலின் என்ற கிராமத்தில், ஏராளமான பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
இந்தக் கிராமத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புயல் காரணமாக வரலாறு காணாத அளவாக 2.5 மீட்டர் அளவுக்கு அங்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.