பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ரங்கராஜன் நியமனம்
சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த ரங்கராஜன் 1992 முதல் 1997 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக செயல்பட்டவர். பின்னர் ஆந்திர ஆளுனராகவும், 12வது திட்டக் கமிஷனின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2003 முதல் 2008 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருந்தவர். பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்ய சபா உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உலக பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை போன்ற சூழ்நிலையில் தற்போது அவர் மீண்டும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பிரதம அலுவலகம் வெளியிட்டு செய்தி குறிப்பில்,
சி. ரங்கராஜன் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த குழுவின் புதிய உறுப்பினர்களாக ஐசிஆர்ஏவின் செளமிதா செளத்ரி, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பைச் சேர்ந்த கோவிந்த ராவ், ஆசிய விவசாயப் பொருளாதாரக் கழகத்தின் விஜய் சங்கர் வியாஸ் மற்றும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக் கவுன்சிலின் சுமன் கே. பெரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.