கோவையில் ஜவுளி உற்பத்தி மையம்-தயாநிதி மாறன்
டெல்லியில் தொழில்நுட்ப ஜவுளி கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் (டெக்னோடெக்ஸ்-2009) ஜவுளித்துறைக்கான புதிய இணையதளத்தைத் துவங்கிவத்த தயாநிதி மாறன் பேசியது:
சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மிகப்பெரிய ஜவுளி பொருளாதாரமாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. எனினும் உலகளாவிய அளவில் தொழில் துறைக்கான ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது.
பல்வேறு தொழில்களுக்கான ஜவுளி வர்த்தகத்தில் உள்நாட்டு சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 11 சதவீதமாக உள்ளது. இதுவே பெரிய வளர்ச்சிதான். கடந்த ஆண்டு இதன் மதிப்பு ரூ.37 ஆயிரத்து 115 கோடியாகும். இது 2012-ம் ஆண்டில் ரூ.66 ஆயிரத்து 414 கோடியாக உயரும்.
வளரும் நாடுகளில் குறிப்பாக சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் தொழில்களுக்கான ஜவுளித்துறைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
ஏராளமான உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தொழில்களுக்கான ஜவுளி உற்பத்தி வசதிகளை அமைத்துள்ளன.
கோவையில் தொழில்களுக்கான ஜவுளி உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தேசிய ஜவுளி நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது, என்றார் தயாநிதி மாறன்.