டாமிப்ளூ-முக கவசங்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
டெல்லி: டாமிப்ளூ மாத்திரைகள், முகக் கவசங்களை பதுக்கி வைப்போர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் டாமிப்ளூ மாத்திரைகளை பதுக்கும் வேலைகளில் மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றை அதிக விலைக்கு விற்க இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல முகக் கவசங்களையும் பதுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் வினீத் செளத்ரி கூறுகையில், இந்தியாவில் டாமிப்ளு மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு உள்ளன. அதே போல முகக் கவசங்களும் போதுமான அளவு உள்ளன. ஆனால், அவற்றைப் பதுக்கி வைத்து விலையை ஏற்ற முயற்சிகள் நடக்கின்றன. இந்தச் செயலில் ஈடுபடுவோர் மீது மருந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டாமிப்ளூ மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மருத்துவமனைகளில் தான் விற்க வேண்டும்.
டாமிப்ளூ உற்பத்தி தொடர்பாக மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது. ஒரு வாரத்தில் 3 கோடி மாத்திரைகள் தயாராகிவிடும்.
ஸ்வைன் ப்ளூ சோதனைக்கான கருவிகள் தட்டுப்பாட்டை போக்கை அவற்றை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறோம் என்றார்.