சென்னையில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
சென்னை: அந்தமான் அருகே இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை நகரிலும் இன்று கட்டடங்கள் குலுங்கின.
அந்தமான் அருகே கடல் பகுதியில் இன்று பகல் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை அடையாறு, தியாகராய நகர், பட்டினப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் உணர முடிந்தது.
இந்த நிலநடுக்கத்தால் பட்டினப்பாக்கத்தில் 8 மாடிக் கட்டடம் குலுங்கியதால் அதிலுள்ள அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
அதே போல தி.நகர், அடையாறு உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.26 மணியளவில் அந்தமானுக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சி தான் (aftershock) இன்றைய நிலநடுக்கம் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அதிகாரி கோபால் கூறினார்.