திருத்தணியில் பக்தர்கள் வெள்ளம்-4 லட்சம் பேர் தரிசனம்
திருத்தணி: ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று ஒரே நாள் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்றும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகையம், தெப்ப திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஆடி கிருத்திகையின் இரண்டாம் நாளான இன்று ஆடி பரணியாகும். இதையடுத்து தமிழகம் மட்டும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் லட்சணக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்தனர்.
அவர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, அன்ன காவடி ஆகியவற்றுடன் ஆடி வந்தனர். மொட்டையடித்து, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். உடுக்கை, பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய ஆட்டத்துடன் பக்தி பாடல்களை இசைத்தவாரே வந்தனர்.
ஆடி பரணி விழாவை முன்னி்ட்டு மூலவருக்கு சந்தனக் காப்பு, பச்சை மாணிக்கம், மரகதத்தினால் ஆன தங்கக் கிரீடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த விழாவினை காண இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பக்தர்கள் வந்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டம் அதிகமிருந்த காரணத்தால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.