சர்வக்ஞர் சிலை திறப்பில் பங்கேற்பது தமிழர்களின் கடமை-பாஜக
சென்னை: கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வது தமிழ் மீதும் தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் பற்றுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமை என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை கடந்த 18 ஆண்டுகளாக சாக்கு துணியால் மூடப்பட்ட நிலையில் இருந்த அவலத்தை பார்த்த எந்தவொரு தமிழனும் மனம் கொதித்துப் போயிருப்பான்.
திருவள்ளுவர் சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கன்னடர்கள் மிகச் சிலரே என்றாலும் அம்மாநிலத்தில் முன்பு இருந்த காங்கிரஸ் அரசு, சிலையை திறக்க எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
துணி்ச்சலான எதியூரப்பா...
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் எதியூரப்பா இப்பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வு காணலாம் என சிந்தித்து அதன் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவரையும், மற்ற எதிர்க்கட்சிகளையும் எல்லா தரப்பு இலக்கியவாதிகளையும் சந்தித்துப் பேசி, ஆதரவு திரட்டினார்.
துணிச்சலுடன் கடந்த 9ம் தேதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கான முயற்சியில் வெற்றி பெற்றார். இதற்காக எதியூரப்பாவை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் கருணாநிதியை அழைத்து, அவரது கைகளினாலேயே திறப்பு விழா நடத்தியது இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுணர்வு மேம்பட துணை புரிந்திருக்கிறது.
தமிழக அரசுக்கு பாராட்டு...
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்காக சென்னையில் சர்வக்ஞர் சிலையை திறப்பதுதான் தீர்வாகும் என்றால் அதற்கும் தயார் என்று இணங்கியதற்காகவும், தமிழக மக்களுக்கு சர்வக்ஞர் பற்றி, குறிப்பாக அவரது கருத்துக்கள் பற்றி தெரிவிப்பதற்காக சர்வக்ஞர் பாடல்களை தமிழாக்கம் செய்து, புத்தக வடிவில், இன்றைய தினம் வெளியிட உள்ளமைக்காகவும் தமிழக அரசையும் பாராட்டுகிறேன்.
சிறப்பான வரேவற்பு கொடுங்கள்...
ஒரு செயற்கரிய செயல் புரிந்த எதியூரப்பா இன்று சென்னை வரும்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதும், இன்று நடக்கும் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதும் தமிழ் மீதும் தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் பற்றுள்ளவர்களது கடமை என்றே கருதுகிறேன்.
எனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என இல.கணேசன் கூறியுள்ளார்.