தமிழகத்தில் தாய்-மகன், மேலும் இருவருக்கு ஸ்வைன் அறிகுறி-மொத்தம் 52 பேருக்கு பாதிப்பு
சென்னை: சென்னை: கனடாவின் டோராண்டோ நகரிலிருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த தாய் மற்றும் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் இருவரும் தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டோரன்டோ நகரில் வசிப்பவர் சித்ரா. 40 வயதாகும் இவரது சகோதரி சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிரார். அவரைப் பார்ப்பதற்காக தனது 14 வயது மகனுடன் சித்ரா சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் நடந்த சோதனையில், இருவருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்ததால் உடனடியாக தண்டையார்பேட்டை அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களின் ரத்தம் மற்றும் மூக்கு, தொண்டைச் சளி சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவரும் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஒருவரும் ஸ்வைன் அறிகுறியுடன் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோயிலில் மேலும் இருவர் அனுமதி:
இந் நிலையில் நாகர்கோவிலில் மேலும் இருவர் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திக்கனங்கோட்டை சேர்ந்த ரத்தினதாஸ் (30), ராஜாவூரை சேர்ந்த ராஜன் (30) இருவரும் நாகர்கோயில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். அவர்கள் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் மேலும் ஒருவர் அனுமதி
நெல்லையில், பன்றி காய்ச்சல் அறிகுறி காரணமாக மேலும் ஒரு வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், நாசரேத்தில் திடீரென வாந்தி பேதி பரவியதால் சுகாதார துறையினர் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த சுடலை மகன் கார்த்திக். கடந்த சில நாட்களாக இவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து அவரை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைதது வந்தனர். கார்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அவரது சளி, ரத்தம் எடுக்கப்பட்டது.
மருத்துவமனையில் உள்ள தொற்று நோய் பிரிவு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அங்கு மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த பேச்சி்முத்து என்ற வாலிபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லையில் இதுவரை 5 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 2 சிறுமிகள், 1 சிறுவன் ஆகியோருக்கு ரத்தம், சளி எடுக்கப்பட்ட பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பேச்சிமுத்து, கார்த்திக் ஆகியோர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாசரேத்தில் வாந்தி, பேதி...
இந்நிலையில நாசரேத் அருகே 200க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நாசரேத் அருகேயுள்ள ஞானராஜ் நகர் பகுதியை சேர்ந்த சிலருக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் வாந்தி பேதி ஏற்பட்டது. அதோடு சிலருக்கு காய்ச்சலும் இருந்தது.
இதை தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன், கிப்சன், சின்னத்துரை, ஜெபக்குமார், பாரத், ஸ்ரீதர், ராஜகனி, இசக்கியம்மாள், பேச்சிசெல்வி, உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் மூக்குபீறி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது பன்றி காய்ச்சல் பரவி வருவதால் நாசரேத் பகுதியிலும் அதன் தாக்கம் இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கடலூர் மருத்துவமனையில் தனிப்பிரிவு:
இதற்கிடையே பன்றி காய்ச்சல் நோயாளிகளுக்கென கடலூர் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவை மாவட்ட கலெக்டர் சீதாராமன் திறந்து வைத்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கடலூரில் பன்றி காய்ச்சல் அறிகுறி இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பிரிவு துவக்கப்ப்ட்டுள்ளது. நோய் அறிகுறி இருப்பவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பொது மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டாம் என்றார்.
இதன்மூலம் தமிழகத்தில் ஸ்வைன் ப்ளூ பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. இதில் 52 பேருக்கு ஸ்வைன் ப்ளூ பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.