கடன்: காளிமுத்து மகன்களின் சொத்துக்கள் முடக்கம்
சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறிய காரணத்தால் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகன்களின் சொத்துக்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிர்மலாவுக்கு 5 மகன், மகள்களும், இரண்டாவது மனைவி மனோகரிக்கு 4 மகன், மகள்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் காளிமுத்து மகள் திருமணம் மற்றும் குடும்ப செலவுக்காக கடந்த 2006ம் ஆண்டு நிர்மல்குமார், கிருஷ்ணா பொன்னுச்சாமி என்ற நபர்களிடம் ரூ. 25 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மேலும் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அசலை திருப்பி தருவதாக அவர் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.
ஆனால், கடனை திருப்பி கொடுக்கும் முன்பாக அவர் கடந்த 2006, நவம்பர் 8ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவரது சொத்துக்கள் மகன்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரது மகன்களிடம் சென்று வட்டியுடன் சேர்த்து ரூ. 27 லட்சத்து 35 ஆயிரத்தையும் தருமாறு முறையிட்டனர். அப்போது காளிமுத்துவின் மகன்கள் டிசம்பர் 2006க்குள் கடனை திருப்பி கொடுப்பதாக உறுதியளித்தனர்.
ஆனால், அவர்கள் சொன்னபடி பணம் தரவில்லை. அது குறித்து அவர்களிடம் கேட்ட போது. சொத்து பிரிக்கப்பட்டுவிட்டதால் கடனை கொடுக்க முடியாது என கூறியுள்ளனர்.
இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் காளிமுத்து மகன்களுக்கு சொந்தமான அயன்பாப்பாக்குடியில் இருக்கும் பெட்ரோல் பங்க், மதுரை ஸ்ரீநகரில் இரண்டாவது மனைவியின் பெயரில் இருக்கும் 0.92 சென்ட் நிலம் ஆகியவற்றை முடக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு நேற்று அளித்த தீர்ப்பில்,
காளிமுத்து குடும்பத்துக்காக கடன் வாங்கியுள்ளார் என்பதை கடன் கொடுத்தவர்கள் நிரூபித்துள்ளனர். இந்நிலையில் சொத்து பிரிக்கப்பட்டுவிட்டதால் கடனை திருப்பி கொடுக்க முடியாது என கூற முடியாது. பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு குடும்பத்தினர் அனைவரும் ஆட்சேபனை இல்லை என கூறியிருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. எனவே பெட்ரோல் பங்க், நிலம் ஆகிய சொத்துக்களை முடக்கி வைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்றார்.